தஞ்சை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் பா.இரஞ்சித் வரலாற்றின் அடிப்படையில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில், தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது ராஜராஜன் சோழன் காலத்தில்தான், மேலும் பெண்களை விலை மாதுக்களாக மாற்றி மங்கள விளாஸ் தொடங்கியது அந்த காலகட்டத்தில்தான் என பட்டியலிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சமூக வலைதளங்கள், முற்போக்கு அமைப்புகளிடமிருந்து பா.ரஞ்சித்திற்கு ஆதரவு குரல் அதிகரித்தது. இந்த பிரச்னை தொடர்பாக இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள்.
தற்போது இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.